Wednesday 14 December 2011

நகைச்சுவை மேதை கலைவாணர்..


                                                                                                                                                                                                                     ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``...இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு திரு நடராசன் மட்டுமின்றி...அவரது மனைவி டி.ஏ. மதுரமும் அசந்துவிட்டார்.!

50 ஆண்டுகள் கூட வாழ்ந்திராத கலைவாணர், காலத்தைக் கடந்து நிற்கும் புகழுக்குச் சொந்தக்காரர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்குச் சொந்தமான கையிருப்பு சிரிப்பு” என்று கூறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடிகராக இருந்த ஒருவருக்குச் சிலை வைத்து மரியாதை செய்த சிறப்பு தமிழ் நாட்டில் கலைவாணருக்கே முதலில் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. நாட்டுக்குச் சேவை செய்யும் நாகரீகக் கோமாளி என்று தன்னை எளிமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர். எதிரியாக யாரையும் உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து முடிந்த அபூர்வ மனிதர்.!

நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலை அடுத்துள்ள சிற்றூர் ஒழுகினச் சேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர்.வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.கலைவாணர் என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து எடுத்துப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து கலைவாணரின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருந்து வந்துள்ளது. 

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் பேரறிஞர் அண்ணர. சாதி, மத ஏற்றத்தாழ்வை அந்த ரயில் பாடல் மாற்றுவதாக குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல

கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே

ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே 

மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி 

மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே..!

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

1. கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல திரையுலக ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. மக்கள் திலகம் எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார்.முதன் முதலாக‌ தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் கலைவாணர் தான். கலைவாணரின் முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா.

2. வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு பின்னாளில் தனது மனைவியான‌ டி.ஏ.மதுரம் அவர்களின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் கலைவாண‌ர் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது!

3. கலைவானர் என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை,கிந்தனார் ஆக்கியதற்கு திருமதி மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று திருமதி டி.ஏ.மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.

4. என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

5.'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் திரு பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார் கலைவாண‌ர்!

6. உடுமலை நாராயணகவியைத் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

7. 1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நின்றவர் ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்.! இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

8. இந்து நேசன் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப் பட்டு சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்ற பட்டத்தை பம்மல் கே. சம்பந்தம் முதலியார் சூட்டினார்!

9. அவ்வமயம் தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற டி.ஏ.மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

10. ''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று சொல்கிறார்கள். சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

11. கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார்..'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்...என்று..தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் வந்து கலைவாண‌ரின் பெருந்தன்மையை உணர்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.!

12. ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!

13. 'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னபோது, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!

14. கலைவாணர், காந்தியடிகளின் பெரும் பக்தர். நாகர்கோவிலில் மகாத்மா காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

15. சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

16. சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

17. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!

18. ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் ஆழ்ந்தது என்று உண்மையை உரைக்கும் பத்திரிகைகள் எழுதின.!

மஹாகவி பாரதியார்....:- ஒரு நினைவு கூறல்


காக்காய் பார்லிமெண்ட்-மகாகவி பாரதியார்...!

இது மஹாகவி எழுதிய கதை. அப்படியே பகிர்வு செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் பொறுமையாக படித்துப் பார்க்க வேண்டும் நட்புகளே.

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண்  காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். “போனால் போகட்டும். ஐயோ, பாவம்” என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

“இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்’’ என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கிவிடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலேகூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

“நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்:“ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது. அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே மந்திரி கிழக் காகம் சொல்லுகிறது:

“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது” என்று சொல்லிற்று.

அப்பொழுது ஒரு அண்டங் காக்கை எழுந்து: “கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்” என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

மஹாகவி பாரதியார் கவிதை எழுதுவதில் மட்டும் இல்லாமல், கதை எழுதுவதிலும் வல்லவராக இருந்து உள்ளார். பின், ஒரு சில கதைகள் தவிர ஏன் அவர் தொடர்ந்து கதைகள் எழுதவில்லை.! என்று தெரியவில்லை.

காக்காய் பார்லிமெண்ட் கதை தற்பொழுதைய காலத்துக்கும் தகுந்தால் போல் உள்ளது. இப்பொழுது படிக்கும்போது, ஏதோ நமது நாட்டு அரசியல்வாதிகளையும், அவர்தம் குடும்பத்தாரையும் நையாண்டி செய்வது போல் பொருத்தமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.! இந்த கதையில் அவர் "காக்காவின் பாஷை" அகராதியைப் பற்றி சொல்லும் போது நம்மால் விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. 

மேலும் மஹாகவி இந்த கதையை  முடிக்கும் போது, "இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை" என்று மேலும் ஒரு நையாண்டியுடன் முடித்து உள்ளார்.! 

''குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு 
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது. 
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, 
எட்டு லட்சுமியும் ஏறி வளருது, 
பயந் தொலையுது, பாவந் தொலையுது 
சாத்திரம் வளருது, சாதி குறையுது, 
நேந்திரம் திறக்குது, நியாயந்தெரியுது, 
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது, 
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, 
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, 
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது,''

"பாரத ரத்னா"...:- மூதறிஞர் ராஜாஜி...:- சில குறிப்புக


பன்முகத் திறமைகள் படத்த...புகழ் பெற்ற  வழக்கறிஞர், மாபெரும் இலக்கியங்களை படைத்த‌ எழுத்தாளர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு பெற்றவரும்...இந்திய அரசியலில் மிகப் பெரிய பதவிகளை வகித்த ராஜதந்திரியானவரும்.."இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவரானவரும்... "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட...உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மூதறிஞர் திரு ராஜாஜியை பற்றி ஒரு நோட்டில் சொல்லி விட முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே சில முக்கிய குறிப்புகளை மட்டும் பகிர்வு செய்துள்ளேன். 
                                             
1. திரு ராஜாஜி அவர்கள் தமிழகத்தில் தற்போதைய கிருஷ்ண‌கிரி மாவட்டத்தில் ஓசூரில் இருந்து 15 கி.மி. தூரத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற‌ கிராமத்தில் முன்சீப்பாக இருந்த சக்கரவர்த்தி வேங்கடார்யா, சிங்காரம்மா தம்பதியருக்கு 10-12-1878ல் 3-வது மகனாக பிறந்தார்.

2. பிறந்த கிராமமான தொரப்பள்ளியிலேயே இளமைக்கல்வியையும் ஓசூரில் அரசுப் பள்ளியிலும் பயின்ற பின்னர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் கல்லூரி படிப்பை முடித்தார்.

3. தமது வழக்கறிஞர் தொழிலை கி.பி. 1900ம் ஆண்டு தொடங்கி நன்கு நடத்தி வந்த திரு ராஜாஜி அவர்கள் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து சுதந்திரப் போரில் ரௌலத் சட்டத்திற்கு எதிராகவும் , ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.

4. தேசப்பிதா மகாத்மா காந்தி 1930ல் தண்டி யாத்திரையை தொடங்கியபோது  வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் தலைமை ஏற்று நடத்தி ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

5. ஒருங்கிணைந்த மதராச பட்டினத்தின் முதன்மை மந்திரியாக 1937ல் பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.அவ்வமயம் இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்க 1939 ல் திரு ராஜாஜி அவர்கள் "Temple Entry Authorization and Indemnity Act" என்ற சட்டத்தை உருவாக்கி மிகப்பெரிய புரட்சி செய்தார் என்றால் அது மிகையாகாது. 2ம் உலகப் போரில் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தை, அன்றைய நாளில் சி.ஆர். பார்முலா என்று சரித்திரம் கூறும் ராஜதந்திர நிகழ்வால் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

6. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் 1946ல் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக திரு ராஜாஜி அவர்கள் பதவி வகித்தார்..

7. சுதந்திர இந்தியாவில் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும்,1948 முதல் 1950 வரை குடியரசுக்கு முன்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.

8. இந்திய அரசில் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

9. ஒருங்கிணைந்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா இவைகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954 வரை பதவி வகித்த போது திரு ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு உள்ளானார்.!

10. ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை காங்கிரசில் இருந்து விலகி 1962ல் திரு ராஜாஜி அவர்கள் தொடங்கினார்.

11. 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தி.மு.க. உடன் கூட்டணி கண்டு தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர பேறறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக துணை செய்தது மட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் திரு ராஜாஜி அவர்களின் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் கைப்பற்றி மைய அரசில் முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.

12. இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" விருது 1954ம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு வழங்கப் பட்டது. 

13. திரு ராஜாஜி அவர்கள் தமது எழுத்தாற்றலால் இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை தமிழில் மொழி பெயர்த்து, தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பாக பங்களித்துள்ளார். இவரது "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக 1958ம் ஆண்டு "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது.

14. "பாரத ரத்னா" திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பட்டு பெரும் புகழ் பெற்ற தமிழிசைப் பாடல் "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" என்பது திரு ராஜாஜி அவர்களால் எழுதப் பட்டது.

15. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1972ம் ஆண்டு தனது 95ம் வயதில் இயற்கை எய்தினார். அப்போது தந்தை பெரியார், கலைஞர், பேறறிஞர், மக்கள் திலகம் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இந்த மாபெரும் தலைவரின் மறைவிற்கு அரசு மரியாதை அளிக்கப் பட்டது. 

16. தமிழக அரசு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொரப்பள்ளியில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாகவும், உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசின் மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.

பாரத ரத்னா....:- இசையரசி...:- எம்.எஸ்.சுப்புலட்சுமி...:- ஒரு நினைவு கூறல்..


ஒரு சமயம் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீரென்று நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தனது மகள் 10 வயதுச் சிறுமி சுப்புலட்சுமியை அழைத்து, குஞ்சம்மாள், நீ வந்து பாடு என்று மேடைக்கு அழைத்தார்.
உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு ஓடிச் சென்று, இந்துஸ்தானி மெட்டில் ஆனந்த ஜா என்ற மராட்டி ராகப் பாடலை, சிறிதும் சபைக் கூச்சமின்றி வியர்வை ததும்ப பாடினார். மக்களின் பலத்த கரகோஷத்தை பற்றி கேட்க்கவும் வேண்டுமா..!

"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி கவிக்குயில் சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.!

இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதிராகவ ராஜாராம் போன்ற, தேச‌ப்பிதா மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் திருமதி எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே.!

தமிழகத்தில் பிறந்து இந்திய இசையுலகின் சகாப்தமாக விளங்கிய திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நோட்டில் சொல்லிவிட இயலாது. இருப்பினும் முன்பே தொடங்கிய பணியினை சிறிதளவு முடித்துக்கொள்ளத் தான் இந்தப் பகிர்வு.  

1. மதுரை சண்முக வடிவு அம்மாள்  ராமசாமிப்பிள்ளை தம்பதியினருக்கு 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி 2ம் குழந்தையாக பிறந்தவர் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி...மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி..ஆவார்.

2. தனது தங்கையின் கச்சேரிகளுக்கு பங்களித்த திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் அண்ணன் பெயர் மதுரை சக்திவேல் பிள்ளை...மிருதங்கக் கலைஞர்...தங்கை பெயர் வடிவாம்பாள்.

3. 1935ம் ஆண்டு மிருதங்க ஜாம்பவான் என்று புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை அவர்களின் மணிவிழாவில் நடைபெற்ற திருமதி எம்.எஸ்.ஸின் கச்சேரி மூலம் அவரது சங்கீதத் புலமையை வெளியுலகம் அறியச் செய்தது. பின்னர் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் திருமதி எம்.எஸ். அவர்கள் கச்சேரி செய்தபிறகு தென்னிந்தியாவின் எல்லா நகரங்களிலும் பிரபலமானார் .

4. நடிகைகள் மட்டுமே நடித்து பாடிக்கொண்டும் இருந்த காலத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் திருமதி எம்.எஸ்.ஸை 1936ம் ஆண்டு தனது சேவாசதனம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். பாடல்கள் மூலம் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் நடிக்கும் போது துணை புரிந்த தியாகி திரு டி. சதாசிவம் அவர்களை 1940ம் ஆண்டு எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

5. தொடர்ந்து "சகுந்தலை" திரைப்படத்திற்கு பிறகு தனது கணவருக்கும் அவரது நண்பர் அமரர் கல்கி அவர்களுக்கும் பத்திரிகை தொடங்க உதவி செய்வதற்காக 1941ம் ஆண்டு "சாவித்திரி" படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார் திருமதி எம்.எஸ் அவர்கள்.

6. 1946ம் ஆண்டு திருமதி எம்.எஸ். அவர்களின் பாடல்களால் பெரும் புகழ் பெற்ற பக்த மீரா திரைப்படம் திரைக்கு வந்தது. "காற்றினிலே வரும் கீதம்", "கிரிதர கோபாலா", போன்ற புகழ் பெற்ற பாடல்கள் கொண்ட பக்த மீரா தமிழில் பெரும் வெற்றியடைந்த பின்னர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு நாடு முழுதும் வெற்றியடைந்த போது ஹிந்தி மீராவைப் பார்த்த ஆசிய ஜோதி பிரதமர் ஜவஹர்லால் நேரு "இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டியது சரித்திரம் கூறும் செய்திகள்.!

7. சிறு வயதில் அன்னையிடமும் திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர்,கடையநல்லூர் வெங்கட்ராமன், டி.பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எல்.வெங்கட்ராம அய்யர், பாபநாசம் சிவன், மைசூர் வாசு தேவாச்சார் ஆகிய மேதைகளிடம் பல்வேறு விதமான கர்நாடக இசையின் நுணுக்கங்களை திறம்பட பயின்றார் திருமதி எம்.எஸ். அவர்கள்.

8. மூதறிஞர் ராஜாஜி, தியாகி டி.கே. சிதம்பரநாத முதலியார்,வள்ளல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், அமரர் கல்கி, வள்ளல் ஆர்.கே. சண்முகம் செட்டியார், பேறறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கு திருமதி எம்.எஸ். அவர்கள் பெரும்பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.

9. மகாகவி, வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற மேதைகள் மற்றும் ஞானிகளின் தமிழ்ப்பாடல்களை மேடைதோறும் பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் திருமதி எம்.எஸ். அவர்கள்.

10. தேசப்பிதா மகாத்மா காந்தி முதல் ஏவுகணை இளவல் டாக்டர் அப்துல் கலாம் வரை அனைத்து பாரத‌ தேசத் தலைவர்களும் திருமதி எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள் என்பது வரலாறு!

11. ஒருசமயம் சபர்மதி ஆசிரமத்தில் பாடும் போது திருமதி எம்.எஸ். பாடியதை கேட்ட தேசப்பிதா...அவரது அபூர்வ குரலால் ஈர்க்கப்பட்டு ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று மனம் விட்டுப் பாராட்டியது மட்டுமன்றி  சுதந்திரத்திற்கு பின்னர் அக்டோபர் 2ம் நாள் 1947ல் மஹாத்மாவின் பிறந்தநாளில் அவர் கேட்க விரும்பியது திருமதி எம்.எஸ். அவர்களின் பாடலை என்ற நிலையில் பாடலை ஒலிநாடாவில் பதிந்து மஹாத்மா காந்திக்கு அனுப்பிய போது கேட்டு மகிழ்ந்தார்.தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதோ' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ் அவர்களால் பாடப்பட்டவையே.!

12. 1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சியில் தனது 72ம் வயதில் கலந்து கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொணட இந்த புகழ் பெற்ற நிகழ்வில் உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி வோர்ல்ட் பர்கிவ் அவர் சின்ஸ்'(இந்த உலகம் நமது பாவங்களை மன்னிக்கட்டும்) என்னும் ஆங்கிலப் பாடலை அங்கிலேய இசைமேதை ஹாண்டல் மேனுபல் இசையமைக்க திருமதி எம்.எஸ். அவர்கள் ஐ.நா. சபையில் பாடியபோது அரங்கு நிறைந்த கரகோஷம் என்பதை சொல்லவே வேண்டாம்.!

13. சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடி பிரபலமடைந்த தமிழ் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை. நீ இறங்காய் எனில் பகலேது' 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

14. திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது இறைவனை துயில் எழுப்ப பாடப்படும் "வெங்கடேச சுப்ரபாதம்" என்ற தெய்வீகப் பாடலை "ப்ரதிவாதி பயங்கரம் அனங்கராச்சாரியார்" என்னும் வைணவப் பெரியவரின் குரலில் தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர். பின்னர் திருமதி எம்.எஸ். அவர்களின் பாடலை அங்கீகாரம் செய்த திருமலை தேவஸ்தானம், அவரது குரலில் ஒலிபரப்ப ஆரம்பித்தது மட்டுமன்றி அந்த ஒலிநாடா மூலம்  திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்சக்கணக்கான வருமானம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

15. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் என்னும் ஆதிசங்கரரின் ஸ்லோகம், ரங்கபுர விஹாரா என்னும் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டப் போது அது உலக அளவில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.இது போன்ற கீர்த்தனைகளை பாடும்போது சமஸ்கிருத வித்வான்களிடம் முதலில் பாடிக் காண்பித்து உச்சரிப்பைத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே இசையமைப்பில் பாடியிருக்கிறார் திருமதி எம்.எஸ். அவர்கள் என்பது வியப்பூட்டும் செய்தி.!

16. எத்தனையோ இசைக்கலைஞர்கள் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர். இப்போதும் பல மாமேதைகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனால் திருமதி எம்.எஸ். அவர்களுக்கென்று சில தனிச் சிறப்புகள் உண்டு.

17. திருமதி எம்.எஸ். அவர்களின் பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தின் மதிப்பு அந்நாளிலேயே பல கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பது செய்திகள். பாடகர்கள் பொதுவாக ராகம், தானம், பல்லவி என்று பாடுவார்கள். ஆனால் திருமதி எம்.எஸ். அவர்கள் தான் பாடிய "ராகத்தின்" மூலம் ஈட்டிய பெருஞ் செல்வம் அனைத்தையும், நற்பணிகளுக்காக "தானமாக" கொடுத்த உன்னத உள்ளம் படைத்த ஒரே இசை அரசி.!

18. அவரது உலகளாவிய பிரபலம்,புகழ்,பணம் எதுவும் அந்த மேதையை மாற்றிவிடவில்லை. ஒரு சமயம் மேடையிலேயே வெளிப்படையாக தன்னைப்பற்றி திருமதி எம்.எஸ். அவர்கள் சொன்னார்..“எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.” நிறைகுடம் ததும்பாது என்ற முதுமொழிக்கேற்று வாழ்ந்த மாதரசி திருமதி எம்.எஸ். என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியுமா.! காரணம் என்ன என்பதை பார்ப்போம். அவரை விருதுகளில் அரசி என்பார்கள்.

1940 இசை வாணி.!
1954  பத்ம பூஷண்.!
1956  காளிதாஸ் சம்மன்.!
1967  ரவீந்திர பாரதி கலைரக் கழகத்தின் டாக்டர் பட்டம்.!
1968  சங்கீத கலா சாகா.!
1968  சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி.!
1970  தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது.!
1974  ரமன் மகசேசே விருது.!
1975  திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்.!
1975  பத்ம விபூஷண்.!
1980  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலஞர்.!
1981  சர்வதேச இசை கவுன்சில் ஆராய்ச்சிப் பேராசிரியர் மற்றும் உறுப்பினர்.!
1988  ஹபிஸ் அலிகான் நினைவு விருது.!
1990  இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.!
1996  கலாரத்னா.!

19. 1998ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" திருமதி எம்.எஸ். அவர்களுக்கு வாழும் காலத்திலேயே வழங்கப்பட்டது என்ற பெருமை மட்டுமன்றி...இசைக்காக பாரத ரத்னா விருதினை பெரும் முதல் நபர் என்ற பெருமையினையும் எம்.எஸ். அவர்களுக்கே உரித்தானது.!

20. இது தவிர திருமதி எம்.எஸ். அவர்களுக்கு 7 டாக்டர் பட்டங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட விருதுகளும், பட்டங்களும் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆளவார்கள் என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை உலகம் என்கிற தரணியை ஆண்டுவிட்டார்.1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் திருமதி எம்.எஸ் கலந்துகொள்ளவில்லை.

22. நான்மாட கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி நள்ளிரவில் த்னது 88ம் அகவையில் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டது.

திருமதி எம்.எஸ் மறைவின் போது அவர் பற்றி...அவருடன் பணியாற்றிய 2 பிரபலங்களின் கருத்து:

இசைமேதை டி.கே. பட்டம்மாள்:

''ஒரே துறையில் இருந்தாலும் எங்களுக்கிடையே எப்போதும் போட்டியோ பொறாமையோ கிடையாது. சகுந்தலா, மீரா, ஆகிய இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது இழப்பு சங்கீத உலகுக்கு பேரிழப்பு என்றால், தனிப்பட்ட முறையில் நான் எனது பிரியமான தோழியை இழந்துவிட்டேன்.. பட்டு என்று அழைக்கும் தோழியை இழந்துவிட்டேன்..''

வி.வி. சுப்பிரமணியம் (வயலின் கலைஞர்)

பதினோரு ஆண்டுகள் அவரது குழுவில் இடம்பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால் அது அவரது தயாள‌ குணத்தைத்தான்.

திருமதி எம்.எஸ். அவர்களை காலம் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது. ஆனால் அவரது அமுதக்குரல் இன்றும் என்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அது காலத்தால் அழிக்க முடியாத அமரக் குரல்.

இந்திய டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் பத்ம ஸ்ரீ விஜய் அமிர்தராஜ்


                                                 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் சுமார் 23 ஆண்டுகள் கலந்துகொண்டு  டேவிஸ் கோப்பை இந்திய குழுவுக்கு 1974 மற்றும்  1987ம் ஆண்டுகளில் தலைமை ஏற்று இறுதிப் போட்டிவரை முன்னேறியவர்.  1973 மற்றும் 1981ம் ஆண்டுகளில் புகழ் பெற்ற‌ கிராண்ட் ஸ்லாம் போட்டியான‌ விம்பிள்டனில் இந்தியாவின் சார்பாக காலிறுதி வரை சென்றவர். உலகின் 16வது சிறந்த ஆட்டக்காரராக(சிக்ஸ்ட்டீந்த் சீடட் பிளேயர்) ஜான் போர்க், ஜிம்மி கானர்ஸ், மற்றும் இவான் லெண்டில் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி பெருமை தேடித் தந்தவர் தான் திரு விஜய் அமிர்தராஜ் அவர்கள்.

சென்னையில் 1953ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி திரு ராபர்ட் அமிர்தராஜ் மற்றும் திருமதி மாகி அமிர்தராஜ் தம்பதியருக்கு மகனாக பிற‌ந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். திரு விஜய் அமிர்தராஜ் அவர்களின் பெற்றோர் இருவரும் டென்னிஸ் வீரர்கள் என்பதால் சிறுவயது முதலே விளையாட பழகினார். ஆயினும் சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற நுரையீரலை பாதிக்கும் மூச்சிறைப்பு நோயினால் 10 வயது வரை பாதிக்கப்பட்ட திரு விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டில் தனது கடும் பயிற்சி மற்றும் அசாத்திய மன உறுதி மூலம் தனது பிரச்சினையிலிருந்து விடுபட்டார் என்பது செய்திகள். இனி திரு விஜய் அமிர்தராஜ் அவர்கள் பற்றிய சில குறிப்புகளை காண்போம்.

1. பள்ளிக் கல்வியை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியிலும், கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்றார்.

2. சிறுவயது முதலே டென்னிஸ் விளையாட்டில் சிற‌ந்து விளங்கிய திரு விஜய் அமிர்தராஜ் 1970-ம் ஆண்டு முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 

3. 1973-ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார்.! 

4. தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அமிர்தராஜ் 16 ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.!

5. ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, இரட்டையர் பிரிவிலும் 13 பட்டங்களை அவர் வென்றுள்ளார். 

6. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்ட திரு விஜய் அமிர்தராஜ் 1981-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார்.!

7. இந்திய டேவிஸ் கோப்பை போட்டிக் குழுவுக்கு தலைமை ஏற்று 1974 மற்றும் 1987-ம் ஆண்டுகளில் இந்தியக் குழு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தார் திரு விஜய் அமிர்தராஜ்.

8. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 1980-ம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் 16 இடத்துக்கு முன்னேறினார் அமிர்தராஜ். 

9. சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பெருமையடையச் செய்த திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு 1983ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு அவரை பெருமைப் படுத்தியது.

10. தொடர்ந்து பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த திரு விஜய் அமிர்தராஜ் 1993-ம் ஆண்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

பன்முகத் திறமைகள்:

தனது டென்னிஸ் விளையாட்டில் மட்டுமன்றி ஆங்கிலத் திரைப்படங்களிலும் பங்களித்துள்ள திரு விஜய் அமிர்தராஜ் ஆக்டோபஸி, ஸ்டார் ட்ரெக் 4 போன்ற படங்களில் நடித்தது மட்டுமன்றி பல தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களை தயாரித்து உள்ளார். ( அனேகமாக சினிமா உலகில் அனுபவம் உள்ள‌ நண்பர்கள் பின்னூட்டத்தில் உதவலாம்)

குடும்ப வாழ்க்கை:

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை திருமணம் செய்து கொண்ட திரு விஜய் அமிர்தராஜ் தம்பதிகளுக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. திரு பிரகாஷ் அமிர்தராஜ் இப்போது இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா() மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ்() நகரத்தில் வசிக்கும் திரு விஜய் அமிர்தராஜ் டி.வியில் விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். 

டென்னிஸ் வீரர்களான திரு ஆனந்த் மற்றும் அசோக் அமிர்தராஜ் ஆகிய  இவரது 2 சகோதரர்களும் 1976 ல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சார்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறினர் என்பது குறிப்பிடத் தக்கது.

அமைதி நடவடிக்கைகளுக்கான ஐ.நா. தூதராகவும் பணியாற்றிய திரு விஜய் அமிர்தராஜ், தூதர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடங்கிய விஜய் அமிர்தராஜ் அறக்கட்டளை ஏழை, எளிய மக்களுக்கு தக்க உதவிகள் புரிவது மட்டுமன்றி, பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்க வியப்பூட்டும் செய்திகள்.

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு இன்று
58ம் பிறந்தநாள். இந்தியாவின் பெருமையை டென்னிஸ் விளையாட்டில் உலக அரங்கில் உயர்த்திய திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sunday 4 December 2011

8ம் எண்ணின் சிறப்பு


                                                                                                                                                    மிடுக்கான தோற்றத்துடன் ஒரு இந்தியர்.. நியூயார்க் நகரின் சிட்டி பாங்கிற்கு சென்று...அங்கிருந்த லோன் ஆபீசரை( கடன் கொடுக்கும் அதிகாரி)சந்தித்து...நான் அவசரமாக..2 வாரங்கள்.. இந்தியா செல்ல இருப்பதால் எனக்கும் 5000 டாலர் பணம் தேவைப்படுகிறது என்று கேட்கிறார். உடனே அந்த லோன் ஆபீசரும்..லோன் வழங்க செக்யூரிட்டி ( அசையும் அல்லது அசையாச் சொத்து) தேவை என்ற போது..அந்த இந்தியர்...வங்கியின் முன் நிறுத்தப்பட்டிருந்த புதிய பெராரி காரின் ( இது உலகின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம்)...சாவியையும்...ஒரிஜினல் டாக்குமெண்ட்களையும்...அவரிடம் கொடுக்கிறார். பின்னர் அந்த லோன் ஆபீசர்.வங்கியின் தலைமை அதிகாரியிடம் ஆலோசித்து (பிரசிடென்ட் ஆப் த பேங்க்).. அனைத்தையும் சரிபார்த்து விட்டு...வங்கியின் லோன் வழங்குவதற்கான நடைமுறை படிமங்களில் கையொப்பங்களையும் பெற்று...அநத இந்தியர் கேட்ட 5000 டாலர்களை கடனாக கொடுக்கிறார்.  அந்த இந்தியர் சென்ற பின்...வங்கியின் தலைமை அதிகாரியும்...லோன் ஆபீசரும்..மிகுந்த மகிழ்ச்சியுடன்...சுமார் 7 லட்சத்து அய்ம்பதாயிரம் டாலர்( 7,50,000 டாலர்) மதிப்புள்ள பெராரி காருக்கு...வெறும் 5000 டாலர் கடன் பெற்று செல்கிராரே என்று நகைகின்றனர்.! வங்கியின் சிப்பந்தி ஒருவர் அந்த பெராரி காரினை வங்கியின்... வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு..சாவியினை லோன் ஆபீசரிடம் கொடுத்துவிடுகிறார்.

2 வாரங்கள் கழித்து..நியூயார்க் திரும்பிய அந்த இந்தியர்..வங்கிக்கு சென்று 5,000 டாலரையும், அதற்கு வட்டியான 15.41 டாலரையும் செலுத்தி..கார் சாவியையும் ஒரிஜினல் டாக்குமெண்டுகளையும் திரும்பப் பெற்று கொள்கிறார். அப்போது அந்த லோன் ஆபீசர் அவரிடம்...இந்த பரிவர்த்தனை..வங்கிக்கு லாபகரமானதாக இருந்தாலும்..தங்களது செயல்..எங்களுக்கு மிகவும் வியப்பளிக்கிறது. ஏனெனில்..நீங்கள்..ஊரில் இல்லாத சமயம்..வங்கி மூலம் தங்களது வசதி வாய்ப்புகள் பற்றிய‌ விபரங்களை..நாங்கள் சோதனை செய்தபோது...தாங்கள் ஒரு பெரிய செல்வந்தர் ( மல்டி மில்லியனர்) என்று அறிந்தோம். நீங்கள் ஏன்..வெறும் 5000 டாலருக்காக.. தங்களது புதிய..பெராரி காரை அடமானம் வைக்கவேண்டும் என்பது புரியவில்லை என்று கேட்டபோது...புன்முறுவலுடன்..அந்த இந்தியர் பின்வருமாறு கூறினார். "" வெறும் 15.41 டாலருக்கு...ஏதாவது ஒரு இடத்தில் ..இந்த நியூயார்க் நகரில்...நான்...அவசரத்திற்கு...எனது புதிய பெராரி காரை...2 வாரங்களுக்கு நிறுத்திவிட்டு..திரும்பி வரும் வரை அது பத்திரமாக இருக்கும் என்று எப்படி நம்ப முடிய்ம்""...! அந்த லோன் ஆபீசரின் முகத்தில் ஈயாடவில்லை.! 

குறிப்பு: நண்பர்களே இது உண்மையாக நடந்த சம்பவம் என்றும்..
அந்த (மல்டி மில்லியனர்) செல்வந்தர்...மாண்புமிகு ராஜ்யசபா உறுப்பினர் ..பெரும் தொழிலதிபர்.."திரு விஜய் மல்லையா"..என்றும் செய்திகளின் வாயிலாக நாம் அறியும் போது...வியப்பும் ..மகிழ்ச்சியும்( ஒரு இந்தியர்..சர்வ சாதரணமாக..உலகின் மிகப் பெரிய பன்னாட்டு வங்கியினையே...திறமையாக கையாண்டிருக்கிறார் என்பதை எண்ணும்போது) ஒரே சமயத்தில் தோன்றுகிறது...♥ Cool ♥

இன்றை தேதியின் 14.10.11...கூட்டுத் தொகை..1+4+1+1+1 = 8. இந்த 8ம் எண்ணின் சிறப்புகள் பற்றி சில சங்கதிகளை காண்போம்.!

பொதுவாக ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில்.. நம்பிக்கை உள்ள மனிதர்கள்..சமுதாயரீதியாக.. எட்டாம் எண் என்றாலே... ஒதுக்கப் படுகிறோம்..என்று பல சமயங்களில் ஆதங்கப்படலாம்...எனவே எட்டாம் எண்ணில் பிறந்த நட்புகளே..கீழ்க்கண்ட தகவல்களை பார்க்கவும்!

எட்டாம் எண்ணில் பிறந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்... பாரத ரத்னா விருது பெற்றவர்.. தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த தந்தை பெரியார்..எட்டாம் எண்காரர்தான்.மேலும்.. தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் 1. நற்குணம் உடையவர்கள்.2. பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். 3. எட்டாம் எண்ணினர்.. நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். 4. பெரும்பாலும் எட்டாம் எண்ணினர்..தங்க‌ளது கல்வியறிவு, கடுமையான உழைப்பு..இவற்றின் மூலம்.. அறிவுஜீவிகளாகி.. ஞானம் என்று சொல்லப்படுகினற நிலை பெற்று விடுவது மட்டுமன்றி...அனைத்து பிரச்சினைகளுக்கும்.. தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில்..படிப்படியாக.. உயர்ந்துவிடுவர்.  எனவே..8ம் எண்காரர்களே..கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்பது அவசியமில்லை..நீங்களாகவே வாழ்வில் உயர்ந்து விடுவீர்கள்..கவலையே வேண்டாம்.. என்பவை செய்திகள்.

8ம் எண்ணில் பிறந்த உலகின் மிகப்பெரிய மனிதர்கள்:‍

1. தந்தை பெரியார்: 17.9.1879
2. புரட்சித் தலைவர்: 17.1.1917
3. ஹாலிவிட் நடிகை எலிசபெத் டெய்லர் : 17.1.1901
4. சீக்கியர்களின் பெருமதிப்பிற்குறிய ம‌தகுரு குருநானக் : 8.11.1470
5. அறிஞரும் எழுத்தாளருமான திரு ஜார்ஜ் பெர்னாட்ஷா : 26.7.1856